பெங்களூரு: அரசு நில மோசடி செய்த புகாரில் முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் கட்டா சுப்ரமணியநாயுடு ஆகியோர் மீதான புகாரை லோக்ஆயுக்தா நீதிமன்றம் விசாரணை நடத்த வேண்டும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பெங்களூரு நகர மாவட்டம், ஹூவிநாயகனஹள்ளி கிராமத்தில் கர்நாடக மாநில தொழில் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை விடுவிப்பு செய்ததின் மூலம் அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்தியதாக கடந்த 2011 ஆகஸ்ட் 20ம் தேதி அப்போது முதல்வராக இருந்த பி.எஸ்.எடியூரப்பா மற்றும் அமைச்சராக இருந்த கட்டா சுப்ரமணியநாயுடு ஆகியோர் மீது லோக்ஆயுக்தாவில் தொழிலதிபர் ஆலம்பாஷா புகார் கொடுத்தார்.
அதையேற்று கொண்ட லோக்ஆயுக்தா நீதிமன்றம், இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை கொடுக்கும்படி லோக்ஆயுக்தா போலீசாருக்கு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை ஏற்று விசாரணை நடத்திய போலீசார், கடந்த 2012 மே 21ம் தேதி 77 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கையை லோக்ஆயுக்தா நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதை விசாரணை நடத்திய லோக்ஆயுக்தா நீதிமன்றம், கடந்த 2016 ஜூலை 25ம் தேதி வழங்கிய உத்தரவில், எடியூரப்பா மற்றும் கட்டா சுப்ரமணியநாயுடு மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டது.
லோக்ஆயுக்தா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆலாம்பாஷா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அம்மனு நீதிபதி ஜான்மைக்கல் குன்ஹா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் லோக்ஆயுக்தா சார்பில் ஆஜரான வக்கீல்கள் வாதம் கேட்டபின், நீதிபதி வழங்கிய தீர்ப்பில், முதல்வர் எடியூரப்பா மற்றும் முன்னாள் அமைச்சர் கட்டா சுப்ரமணியநாயுடு ஆகியோருக்கு எதிராக லோக்ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை ரத்து செய்து லோக்ஆயுக்தா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும் கடந்த 2011 ஆகஸ்ட் 20ம் தேதி லோக்ஆயுக்தா போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் உள்ள அம்சங்களை அடிப்
படையாக வைத்து மீண்டும் புகாரை லோக்ஆயுக்தா நீதிமன்றம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். உத்தரவால், எடியூரப்பா மற்றும் கட்டா சுப்ரமணியநாயுடு ஆகியோர் நிலவிடுவிப்பு புகாரில் சிக்கியுள்ளனர்.